அரியானாவில் தங்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்படும் : துஷ்யந்த் சவுதாலா

சண்டிகர்: அரியானாவில் தங்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்படும் என்று ஜனநாயக ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. அரியானா மக்களுக்கு வேலை வாய்ப்பில் 75 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக துஷ்யந்த் தெரிவித்துள்ளார். அரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வந்தது. இங்குள்ள 90 பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், பாஜ. 40 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும் பிடித்துள்ளன.

துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும், பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் 2 இடங்களிலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இங்கு இழுபறி ஏற்பட்டுள்ளது. 7 சுயேச்சைகள் மற்றும் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சிக்கு இந்த தேர்தலில் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

இவர்களின் ஆதரவை பெற்றாலே பாஜ ஆட்சி அமைத்துவிட முடியும். இதனால், பாஜ தலைவர்கள் இந்த 7 சுயேச்சைகளையும், நேற்று மாலை டெல்லிக்கு அழைத்து சென்றுவிட்டனர். அவர்களிடம் பாஜ.வுக்கு ஆதரவு கேட்டு பேச்சு நடப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அரியானாவில் தங்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்படும் என்று ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்.

Related Stories: