கேரளா: கேரள மாநிலம் வயநாடு நிலம்பூர் வனப்பகுதி மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகமான பகுதியாகும். அவர்கள் அவ்வப்போது ஆதிவாசி கிராமங்களுக்குள் புகுந்து கூட்டம் நடத்தி மக்களை அரசுக்கு எதிராக திசை திருப்புவார்கள். மேலும் அதிகாரிகளை கடத்தி செல்வது, துப்பாக்கி சண்டை போன்ற பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் வயநாடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த நிலையில் இந்தியாவில் உள்ள 30 மாவட்டங்களுக்கு மாவோயிஸ்ட்டுகளால் ஆபத்து ஏற்பட உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு மாவோயிஸ்டுகளால் அச்சுறுதல் இருப்பதாக மத்திய உளவுத்துறை கேரள அரசுக்கு தகவல் அனுப்பியது.