தொடர் மழையால் பாலம் இடிந்து பிளந்தது

பாகூர் :  தவளக்குப்பம் என்.ஆர்.நகர் அருகே கடலூர்- புதுச்சேரி சாலையில் பழமைவாய்ந்த பாலம் உள்ளது. இது பழுதடைந்ததால் 15 வருடத்திற்கு முன்பு, அதன் அருகில் புதிய பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த பழைய பாலத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் புதிய பாலத்தில் போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படும்போது பழைய பாலம் வழியாக வாகன போக்குவரத்து திருப்பி விடப்படும். சமீபத்தில் இந்த பாலத்தில் ஒரு பகுதியில் லேசாக விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக, நேற்று காலை இந்த பாலம் திடீரென உடைந்து 5 அடி உள்வாங்கியது.

இதனால் பாலத்தை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாலம் உடையும்போது பொதுமக்கள் யாரும் அந்த வழியாக செல்லாததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்த பொதுப்பணித்துறை (தேசிய நெடுஞ்சாலை) உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி, இளநிலை பொறியாளர் மனோகரன் ஆகியோர் இடிந்து விழுந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து, பாலம் இடிந்து விழுந்த பகுதிகளின் இருபுறமும் பேரிகார்டு அமைத்து போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். தடைக்கான அறிவிப்பு பலகையையும் வைத்தனர்.

Related Stories: