விருதுநகர்: பசுமை பட்டாசு குழப்பத்தால் சிவகாசியில் 25 சதவீதம் உற்பத்தி குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றுள் 3 லட்சம் பேர் நேரடியாகவும், 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் இந்த தொழிலை நம்பி இருக்கின்றனர். பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கான மூலப்பொருட்கள் பற்றிய விவரம் தெரியாததால் சுமார் 3 மாத காலமாக தொழிற்சாலை தொடங்க முடியாமல் உற்பத்தியானது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு 25 விழுக்காடு பட்டாசு உற்பத்தி குறைந்திருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, 3 மாதங்கள் உற்பத்தி நடைபெறாததால் சுமார் 800 முதல் 1000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.