சேலம் : பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயிலை கவிழ்க்க சின்னசேலம் அருகே தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப்பை வைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெங்களூரு- காரைக்கால் பயணிகள் ரயில் நேற்று காலை புறப்பட்டது. சேலம் ரயில் நிலையத்திற்கு மதியம் வந்தது. பின்னர் அங்கிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே புக்கிரவாரி ரயில் நிலையம் அருகே சென்றபோது தண்டவாளத்தில் போடப்பட்டிருந்த பெரிய கல்லை மோதியபடி ரயில் சென்றது. இதனால், ரயிலின் முன் பகுதி சேதம் அடைந்தது. இதனையறிந்த ரயில் இன்ஜின் டிரைவர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும், ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.