ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் துர்க்கை அம்மன் சிலையை ஆற்றில் கரைக்க சென்ற 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ராஜஸ்தானில் நவராத்திரி விழா கடந்த 9 நாட்களாக கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றன. இதற்காக திரளான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதன் பின்னர் துர்க்கை அம்மன் சிலைகளை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. துர்க்கை சிலையை பார்வதி ஆற்றில் கரைப்பதற்காக நேற்றிரவு சிலர் ஊர்வலமாக எடுத்து சென்றனர். சிலையை கரைத்து கொண்டிருந்த போது ஒரு சிறுவன் குளிப்பதற்காக ஆற்றில் குதித்ததாகவும் அப்போது அவன் நீரில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது.