திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.3.84 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது. நேற்றிரவு திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லவிருந்து ஏர் ஏசியா விமானத்தில் இருந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது இளையான்குடியை சேர்ந்த ஆசாத் என்பவர் அமெரிக்க டாலர்களை தனது கைப்  பையிலும், யூரோ கரன்சியை உருட்டி கருப்பு டேப்பால் சுற்றி தனது ஆசன வாயில் மறைத்தும் கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து கரன்சிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் ஆசாத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த மலிண்டா விமான பயணியிடம் 15 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 50 சவரன் தங்கம், மேலும் அவரிடமிருந்து 1 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 8 லேப்டாப் , 300 பிளாஸ்டிக் வாட்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இளையான்குடியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது ஆசன வாயில் மறைத்து 50 சவரன் தங்கத்தை கடத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விமான பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: