ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் 2 மாதங்களாக வீட்டுக் காவலில் உள்ள பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லாவை தேசிய மாநாட்டுக் கட்சியினர் நேற்று சந்தித்து பேசினர்.காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்ட பின்னர், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, துணை தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி உள்பட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு கடந்த 2 மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லாவை சந்திப்பதற்கு அக்கட்சியின் ஜம்மு மாநிலத் தலைவர் தவீந்தர் சிங் ராணா ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் அனுமதி கோரினார். இதையடுத்து, மாநில அரசு அவர்களுக்கு நேற்று முன்தினம் அனுமதி அளித்தது.