மூணாறு: மது போதையில் வகுப்புக்கு வந்த 4 பிளஸ் 2 மாணவிகளால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவிகளுக்கு மதுவை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.கேரள மாநிலம், மூணாறு அருகே தேவிகுளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் மூணாறு சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளியில் பிளஸ் 2 வகுப்புக்கு 4 மாணவிகள் தள்ளாடிய நிலையில் வந்துள்ளனர். விளக்கம் கேட்டபோது உளறினர். இதுகுறித்து ஆசிரியர் உடனடியாக பள்ளி முதல்வருக்கு தகவல் தெரிவித்தார். அவர், மூணாறு சைல்டுலைன் ஊழியர் எட்வினுக்கு தகவல் தெரிவித்தார். எட்வின், மாணவிகளை பார்வையிட்டு தேவிகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் 4 மாணவிகளையும் மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கு இவர்களை பரிசோதித்த டாக்டர், 4 பேரும் மது அருந்தியதை உறுதி செய்தார்.