விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இப்போது இரு அணி களுக்கு இடையே, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் மயங்க் களம் இறங்கினர். ரோகித் 154 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்சர் உதவியுடன் தனது 4 வது சதத்தை கடந்தார். டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, விக்கெட் இழப்பு ஏதுமின்றி 202 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும் ரோகித் 115 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் சதம் விளாசினார். அவர் 204 பந்துகளை சந்தித்து இரண்டு சிக்சர், 13 பவுண்டரி உதவியுடன் இந்த சதத்தை அடித்தார்.