நாடு முழுவதும் 250 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு உடனடி வங்கிக் கடன் வழங்கும் முகாம்கள் இன்று தொடக்கம்

டெல்லி : நாடு முழுவதும் முதற்கட்டமாக 250 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு உடனடி வங்கிக் கடன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் விவசாயக் கடன், வீட்டு வசதி கடன், வாகனக்கடன், தனிநபர் மற்றும் வர்த்தக கடன்கள் வழங்கப்படும் என பொதுத் துறை வங்கிகள் அறிவித்துள்ளன. நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையை சமாளிப்பது குறித்து பொதுத் துறை வங்கிகளின் நிர்வாகிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் 19ம் தேதி ஆலோசனை நடத்தினார்.

அப்போது திருவிழாக் காலங்களில் பொதுமக்களின் கைகளில் பணம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் 400 மாவட்டங்களில் மாபெரும் கடன் முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சரஸ்வதி பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் முதற்கட்டமாக 250 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கடன் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

முகாம்கள் மூலம் கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி உள்பட அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் முடிவு செய்துள்ளன.இதில் சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான கடன் கல்விக்கடன், தனிநபர் கடன் ஆகியவை உடனடியாக வழங்கப்படுகின்றன.இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக இந்த உடனடி கடன் வழங்கும் திட்டம் தீபாவளி பண்டிகைக்கும் முன்பாக 150 மாவட்டங்களில் வருகிற 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: