இலங்கை வீரர்களுக்கு பாகிஸ்தானில் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அதனை கேலி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பல ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் நடக்கிறது. அந்நாட்டிற்கு வந்துள்ள இலங்கை அணிக்கு எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடந்து விடக்கூடாது என்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலத்த பாதுகாப்பு அளித்து வருகிறது. போட்டியில் பங்கேற்க வந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஜனாதிபதிக்கு கொடுக்கும் அளவுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கிண்டலடித்துள்ளார். தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், இலங்கை வீரர்களுக்கு பாகிஸ்தானில் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வீடியோவை பகிர்ந்து கேலி செய்துள்ளார். பாகிஸ்தானில் ஒருவர் எடுத்த வீடியோவை பகிர்ந்த கம்பீர், ‘‘இது காஷ்மீர் இல்லை. இது கராச்சி என்பதை நினைவு கூர்வோம்’’ என்று பதிவிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்காக கராச்சியில் உள்ள தேசிய மைதானத்திற்கு இலங்கை வீரர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்கு 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாதுகாப்புக்காக சென்றதால் கம்பீர் இப்படி கிண்டலடித்துள்ளார்.