விசாகப்பட்டினம்: இந்திய - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்டில் துவக்க வீரர் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். இந்தியா விக்கெட் இழப்பின்றி 202 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் தடைபட்டது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி, தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்ட் நேற்று விசாகப்பட்டிணத்தில் துவங்கியது. டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு அணியில் சேர்க்கப்பட்ட ரோகித் சர்மா, இப்போட்டியில் முதன்முறையாக துவக்க வீரராக களமிறங்கினார். இவருடன் மயங்க் அகர்வாலும் துவக்க வீரராக களமிறங்கினார்.
இருவரும் துவக்கம் முதலே நிதானத்துடனும், மோசமான பந்துகளை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்க விட்டபடியே இருந்தனர்.