லண்டன்: லண்டன் வங்கியில் உள்ள ஐதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் சொத்து தொடர்பாக நடந்த வழக்கில், இந்தியாவுக்கு சாதகமாக லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது, தனி சமஸ்தானமாக இருந்த ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதை எதிர்க்கொள்ள பாகிஸ்தான் தரப்பில், நிஜாமுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. 1948ம் ஆண்டு இந்திய ராணுவம் எடுத்த `ஆப்ரேஷன் போலோ’ நடவடிக்கையின்போது, பிரிட்டனுக்கான பாகிஸ்தானின் ஆணையர் ஹபீப் இப்ராஹிம் ரஹிம்தூலாவின் லண்டன் வங்கிக் கணக்கில் ஐதராபாத்தின் ஏழாவது நிஜாமின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த நவாப் மொயின் நவாஸ் ஜங், தங்களது அரசின் வசம் உள்ள ஒரு மில்லியன் பவுண்டுகளை பாதுகாப்பாக வைக்கும் எண்ணத்தில் பரிமாற்றம் செய்தார். அது தற்போது 35 மில்லியன் பவுண்டுகளாக பெருகி உள்ளது. ரஹிம்தூலாவின் நாட்வெஸ்ட் வங்கி கணக்கில் இருக்கும் இந்த பணத்திற்கு நிஜாமின் வாரிசுகள் மற்றும் பாகிஸ்தான் அரசு சொந்தம் கொண்டாடியது. இதுதொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த விவகாரத்தில் நிஜாமின் வாரிசுகள் இந்திய அரசுடன் இணைந்து வழக்கை நடத்தி வந்தனர். இதனை லண்டன் நீதிமன்றம் விசாரித்து வந்தது.