மும்பை: மும்பையில் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (பிஎம்சி) கடந்த 1984ல் தொடங்கப்பட்டது. இந்த வங்கி டெல்லி, கர்நாடகா, கோவா, குஜராத், ஆந்திரா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 137 கிளைகளுடன் நாட்டிலேயே சிறந்த 10 கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாக உள்ளது. ஆனால், இவ்வங்கி கடந்த 6 மாதமாக கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மும்பை நிறுவனத்திற்கு கொடுத்த 4,300 கோடி கடன் வராக்கடனாக மாறியது. இது குறித்து வங்கியின் முன்னாள் இயக்குனர் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இதற்கிடையே, ரிசர்வ் வங்கி பிஎம்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. வாடிக்கையாளர்கள் அடுத்த 6 மாதத்திற்கு வெறும் 1000 மட்டுமே எடுக்க முடியும் என உத்தரவிடப்பட்டு பின்னர் 10,000 ஆக அதிகரிக்கப்பட்டது. அதே போல், புதிதாக எந்த கடனும் வழங்கக் கூடாது, டெபாசிட்களும் போடக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதற்கு வாடிக்கையாளர்களும், டெபாசிட் செய்துள்ளவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக அரசின் செய்தித்துறை அறிக்கை வெளியிட்டது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டரில் பதிவிட்டார். அதில், ‘பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி விவகாரம் குறித்து பிஐபி அறிக்கை வெளியிட்டுள்ளது. டெபாசிட்தாரர்கள் ஏதேனும் குறைகள், சந்தேகங்கள் இருந்தால் www.pmcbank.com என்ற இணையதளத்திலும், 1800223993 என்ற இலவச தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்,’ என கூறி இருந்தார்.