புதுடெல்லி: எஸ்சி, எஸ்டி சட்டம் தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த சீராய்வு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதுகுறித்து ஏற்கனவே வழங்கியிருந்த தனது முந்தைய உத்தரவை திரும்ப பெறுவதாக நேற்று வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டு தெரிவித்துள்ளது.
எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனது உத்தரவில், “பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்கீழ் புகார் அளித்தால் அவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. மேலும், புகார் குறித்து தீவிர விசாரணைக்கு பின்னரே அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.இந்த தீர்ப்பு என்பது வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் வகையில் உள்ளது எனக்கூறி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பின. மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்து அதனை அவசரமாக நிறைவேற்றியது. அதன்படி, வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் பெற முடியாது என குறிப்பிடப்பட்டது.