விசாகப்பட்டினம்: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டி, ஒய்.எஸ்.ஆர் ஸ்டேடியத்தில் நாளை காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியில் தொடக்க வீரராகக் களமிறங்கும் ரோகித் ஷர்மா கணிசமாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பயிற்சி ஆட்டத்தில் டக் அவுட்டானதால் அவருக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களில் வென்று ஆஸ்திரேலியாவுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ள இந்தியா, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் வென்றால் புதிய சாதனை படைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2013ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் விளையாடிய எந்த டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியதில்லை என்ற பெருமையை தக்கவைத்துக் கொள்ளவும் கோஹ்லி & கோ முனைப்புடன் உள்ளது. வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ரா காயம் காரணமாக விலகியுள்ளது சற்று பின்னடைவை ஏற்படுத்தி இருந்தாலும் ஷமி, இஷாந்த், உமேஷ் கூட்டணி தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும்.