பெங்களூரு: கர்நாடகாவில் 15 சட்டபேரவை தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ், மஜத கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், இவர்களை தகுதி நீக்கம் செய்து அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார். இதை எதிர்த்து பதவி பறிக்கப்பட்ட 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், காலியாக உள்ள இந்த 17 தொகுதிகளில் இரண்டை தவிர, மற்ற 15 தொகுதிகளுக்கும் அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 2 தொகுதிகளில் தேர்தல் நடத்த கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்க வே தடை விதித்துள்ளது. இதற்கிடையில், ‘இடைத்தேர்தலில் தங்களையும் போட்டியிட அனுமதிக்க வேண்டும் இல்லையெனில், வழக்கு விசாரணை முடியும் வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்,’ என்று தகுதி நீக்க எம்எல்ஏ.க்கள் முறையிட்டனர்.