புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நீதிமன்ற காவலில் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு, கடந்த 11ம் தேதியில் இருந்து விசாரணையில் இருக்கிறது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கெயிட் முன்னிலையில் நேற்று பிற்பகல் மீண்டும் இந்த மனு மீது விசாரணை நடந்தது. அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதாடுகையில், ‘‘ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினால் அவர் வெளிநாடு தப்பிவிடுவார், சாட்சியங்களையும், ஆதாரங்களையும் கலைத்து விடுவார் எனக்கூறி அதனை நிராகரிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்த ஒரு விவகாரத்தில் அது தொடர்பான ஆதாரத்தை தற்போது அழிக்க முடியுமா?’’ என்றார்.