நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மதியம்பட்டி அருகே திருமணிமுத்தாற்றில் கட்டப்பட்ட தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு மலையடிவாரத்தில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாரானது சேலம் மாவட்டத்தில் பல்வேறு வழியாக பாய்ந்து நாமக்கல் மாவட்டத்தின் வழியே செல்லும் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த திருமணிமுத்தாற்றில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு குடிநீருக்கும் ஏதுவாக உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக திருமணிமுத்தாற்றில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதை தொடர்ந்து ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மதியம்பட்டி மற்றும் செழிப்பாளையம் இடையிலான தரைப்பாலமானது தொடர்ந்து சேதப்பட்டு வந்தது.
