விருதுநகர்: ராஜபாளையம் துவங்கி திருவில்லிபுத்தூர் வரையிலான காயல்குடி ஆறு ஆக்கிரமிப்பாளர்களால் மறைந்து வருகிறது. 15 கிராமங்களின் வாழ்வாதாரமாக இருந்த இந்த ஆற்றை மீட்டெடுக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ராஜபாளையம் அருகே மேலபாட்ட கரிசல் குளம் கண்மாயில் நிறைந்து வரும் மழைநீர் காயல்குடி ஆற்றில் ஓடி சம்பந்தபுரம், கொத்தன்குளம், வேப்பங்குளம், படிகாசு வைத்தான், வைத்தியலிங்கபுரம், துலுக்கன்குளம், பிள்ளையார் குளம், கங்காகுளம், சித்தங்குளம், நதிக்குடி என 15 கிராமங்கள் வழியாக 15 கி.மீ தூரம் ஆறு பயணிக்கிறது. 15 கி.மீட்டரில் உள்ள 15 கண்மாய்களின் நீர் ஆதாரமாக விளங்குகிறது. காயல்குடி ஆறு கடந்த 10 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி தவிக்கிறது. ஆற்றில் திருமண மண்டபங்கள், தனியார் பள்ளி கட்டிடங்கள், குடியிருப்புகள் என பலநூறு கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மேலும் ஆற்று முழுவதும் கருவேலம் மரங்கள் மண்டி கிடக்கின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டுமென விவசாயிகள் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. காயல்குடி ஆறு நிறைந்து ஓடிய காலங்களில் 15 கண்மாய்கள் நிறைந்து நெல், கரும்பு, வாழை விவசாயம் செழிப்பாக நடைபெற்றது. தற்போது புதர் மண்டி கிடப்பதால் கடந்த 8 ஆண்டுகளாக மழை பெய்தாலும் ஆற்றில் தண்ணீர் வருவதில்லை. இதனால் 15 வருவாய் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.