மரக்காணம்: மரக்காணம் அருகே குடிநீர் பிரச்னையை கண்டித்து குடிநீர் தொட்டியை கிராம மக்கள் முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்டது கீழ்பேட்டை ஊராட்சி. இங்குள்ள காலனி பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீர் உவர்நீராக மாறிவிட்டது. இதனால் இப்பகுதி மக்களுக்கு கடற்கரையோரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் பைப் லைன் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நீர்தேக்க தொட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்துவிட்டது. இதனால் அந்த தொட்டியில் முழு கொள்ளளவு தண்ணீர் ஏற்ற முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக பாதியளவு தண்ணீர் மட்டுமே நிரப்பப்படுகிறது. இந்த தண்ணீரை கொண்டு இப்பகுதி மக்களுக்கு போதிய அளவு குடிநீர் வழங்க முடியவில்லை. இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்துள்ளனர்.