விமானப்படையின் புதிய தளபதி பதவுரியா

புதுடெல்லி: இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதவுரியா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய விமானப்படையின் 25வது தளபதியாக பி.எஸ். தனோவா கடந்த 2017 ஜனவரியில் பொறுப்பேற்றார். இவர் வரும் 30ம் தேதியுடன் ஓய்வு  பெற உள்ளார். இதையடுத்து, விமானப்படையின் புதிய தளபதியாக யார் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆர்.கே.எஸ்.பதவுரியா நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறையின் முதன்மை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டரில் நேற்று அவர் வெளியிட்ட பதிவில், தற்போது விமானப்படை துணை தளபதியாக பதவி  வகித்து வரும் ஆர்.கே.எஸ். பதவுரியாவை விமானப்படை தளபதியாக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது, என கூறியுள்ளார். பதவுரியா இரண்டு ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார். இவர் தனது 36 ஆண்டு கால சேவையில் அதி விஷிஷ்ட் சேவா, வாயு சேனா, பரம் விஷிஷ்ட் சேவா உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். ரபேல் போர் விமானத்தை இயக்கும் பயிற்சியை பெற பிரான்ஸ் சென்ற  விமானப்படையின் முதல் குழுவில் இவரும் இடம் பெற்றார்.

Related Stories: