புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு, பெட்ரோல், டீசல் விலை நேற்று ஒரே நாளில் 27 காசு வரை உயர்ந்தது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயிக்கின்றன. சர்வதேச சந்தையில் சமீப நாட்களாக கச்சா எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரிய மாற்றம் ஏற்படாமல் இருந்தது. ஆனால், கடந்த 14ம் தேதி சவூதி அரபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால், ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 19.5 சதவீதம் அதிகரித்து, பேரல் 72 டாலரை நெருங்கியது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய உயர்வாகும். உற்பத்தி மற்றும் சப்ளையில் மீண்டும் கச்சா எண்ணெய் விலை இயல்பு நிலையை நோக்கி திரும்பி வருகிறது. நேற்று பேரல் 64.38 டாலராக குறைந்தது.