பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தை நிறுத்தி காதல் ஜோடியை சேர்த்து வைத்த திருநங்கைகள்

பாபநாசம்: தஞ்சை அருகே உள்ள உதாரமங்கலத்தை சேர்ந்த நடராஜன் மகள் ஜெயா (21)வுக்கும், செங்கிப்பட்டி அடுத்த பாலையப்பட்டி துரைமாணிக்கம் மகன் சித்திரவேல்(25) என்பவருக்கும் வரும் 16ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. பெற்றோர் பார்த்து இந்த திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தனர். ஜெயாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. அவர் அதே ஊரைச்சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபரை காதலித்து வந்தார். ஆனாலும் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தை தடுத்து நிறுத்தும் தைரியம் அவருக்கு இல்லை. இதுபற்றி தனது காதலனிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து விக்னேஷ் தனது உறவினரான திருநங்கை சத்யா (35) என்பவரிடம் கூறினார். சத்யா தன்னுடன் சில திருநங்கைகளையும், விக்னேசையும் அழைத்துக்கொண்டு சரபோஜிராஜபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். ஜெயாவின் விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் திருமணம் செய்து வைக்க போகிறார்கள். அதை தடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.இதைத்தொடர்ந்து எஸ்.ஐ. விமலாராணி ஜெயா மற்றும் அவரது பெற்றோரை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேஜர் ஆன பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைத்தால் நடவடிக்கை எடுப்போம் என்றார். இதைத்தொடர்ந்து பெண் வீட்டார், விக்னேசுக்கு பெண் கொடுக்க சம்மதித்தனர்.இதுகுறித்து நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை வீட்டாருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர், திருநங்ககைள் ஏற்பாட்டின் பேரில் சரபோஜிராஜபுரத்தில் உள்ள முனியாண்டவர் கோயிலில் விக்னேஷ், ஜெயா திருமணம் நடத்தப்பட்டது. பெற்றோர் நிச்சயம் செய்த மாப்பிள்ளைக்கு வேறு இடத்தில் பெண் பார்த்துக்கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: