சென்னை: சென்னை ஆலந்தூரில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்றது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பரங்கிமலை பகுதியில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்த இருவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 48 போதை மாத்திரைகள், 8 கஞ்சா பொட்டலங்கள் ரூ.25,000 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பரங்கிமலை, ஆலந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களை மர்ம நபர்கள் விற்பனை செய்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதனடிப்படையில் பரங்கிமலை நசரத்புரம் பகுதியில் நேற்று இரவு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரித்த போது, அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள் என்று சொல்லப்படும் போதை பொருள் மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.