அரசு ஆரம்பப் பள்ளியில் சப்பாத்தியும், உப்பும் மதிய உணவாக தரும் வீடியோ சித்தரிக்கப்பட்டது- யோகி ஆதித்யநாத் பேச்சு

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் அருகே பள்ளிக் குழந்தைகளுக்கு சப்பாத்தியும் உப்பும் மதிய உணவாக கொடுக்கப்பட்டது போன்று வைரலான வீடியோ சித்தரிக்கப்பட்டது என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். சியூர் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளியில் மதிய உணவாக சப்பாத்தி மற்றும் உப்பை மாணவர்கள் உண்ணும் காட்சியை செய்தியாளர் ஒருவர் படம்பிடித்து சமூகவலைதளங்களில் கடந்த மாதம் பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் மாநில அரசுக்கு எதிராக கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது. இதனிடையே வீடியோ வெளியிட்ட செய்தியாளர் மீது  கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர். அதற்கு தான் நினைப்பதற்கேற்ப செய்தியாளர் பள்ளியில் ஒரு வீடியோவை வடிவமைத்து எடுத்துள்ளதாக யோகி ஆதித்யநாத் பதிலளித்துள்ளார்.

மாணவர்கள் வரிசையாக அமரவைக்கப்பட்டு கச்சிதமாக வீடியோ எடுக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மதிய உணவு வழங்கப்படும் நேரமும் வீடியோ எடுக்கப்பட்ட நேரமும் ஒன்றா என்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாணவி ஒருவர் கையில் துடைப்பம் ஒன்றை கொடுத்து பள்ளியை கூட்டுமாறு செய்தியாளர் வற்புறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசை விமர்சனம் செய்பவர்கள் ஆரோக்கியமானமுறையில் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை சீர்செய்தது தங்கள் அரசின் பெரிய சாதனையாக கருதுவதாக தெரிவித்துள்ளார். தங்கள் மாநிலத்தில் வகுப்புவாத கலவரங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் மத விழாக்கள் அமைதியாக நடைபெறுகின்றன என்றும் மற்ற மாநிலங்களுக்கு தாங்கள் ஒரு முன்மாதிரியாக இருப்பதாகவும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Related Stories: