புதுடெல்லி: பீகாரில் இருந்து நேபாள நாட்டுக்கு குழாய் மூலம் பெட்ரோல் கொண்டு செல்லும் திட்டத்தை பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் சர்மா ஒலியும் தொடங்கி வைத்தனர். பீகார் மாநிலம், மோதிஹரியில் இருந்து நேபாள நாட்டின் அமேல குஞ்ச் பகுதிக்கு பெட்ரோலிய உற்பத்தி பொருட்களை குழாய் மூலம் கொண்டு செல்லும் பணிக்கான பூமி பூஜை கடந்த ஆண்டு நேபாள பிரதமர் சர்மா ஒலி இந்தியா வந்திருந்தபோது தொடங்கப்பட்டது. 30 மாதங்களில் இந்த பணியை முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில், 15 மாதங்களில் குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. பீகார்- நேபாளம் இடையேயான சுமார் 69 கிமீ தொலைவுக்கு பதிக்கப்பட்டுள்ள இந்த பெட்ரோலிய குழாயின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இதை பிரதமர் மோடி, நேபாள பிரதமர் சர்மா ஒலி ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டாக தொடங்கி வைத்தனர். தெற்காசியாவில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு எல்லை தாண்டி பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்லும் முதல் திட்டம் என்ற பெருமை இந்த திட்டத்துக்கு உண்டு.