பண்ருட்டி: பண்ருட்டி கூட்டுறவு சங்க தேர்தலில், வேட்பு மனுக்களை அதிமுகவினர் கிழித்து எறிந்தனர். இதையடுத்து தேர்தலை அதிகாரி ரத்து செய்தார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மருங்கூரில் தொடக்க கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் 2639 உறுப்பினர்கள் உள்ளனர். சங்க தேர்தலில் வாக்களிக்க 1955 பேர் தகுதியானவர்கள். கடந்த சில ஆண்டுக்கு முன்பு இந்த கூட்டுறவு வங்கியில் தேர்தல் நடந்தபோது அசம்பாவிதம் ஏற்பட்டதையடுத்து தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் இயக்குனர் பதவிக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நடந்தது. தேர்தல் அலுவலர் தேவியிடம் அதிமுக, திமுக, பாமக, தவாக கட்சியை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். இந்நிலையில் அதிமுகவினர் திடீரென தேர்தல் அலுவலர் அறைக்கு சென்று அங்கு இருந்த வேட்புமனுக்களை எடுத்து கிழித்து எறிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.