திருமலை: ஐதராபாத்தில் பிளாட்பாரத்தில் கிடந்த பெட்டியை திறந்தபோது மர்மப் பொருள் வெடித்து வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ராஜேந்திரா நகர் பகுதியில் பி.வி.நரசிம்மராவ் எக்ஸ்பிரஸ் சாலை உள்ளது. இந்த மேம்பால சாலையில் 279வது தூண் எதிரே லாரி ஒன்று நின்று கொண்டு இருந்தது. இதன் அருகில் உள்ள பிளாட்பாரத்தில் சிறிய மர்ம பெட்டி ஒன்று கிடந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்ற அதே பகுதியைச் சேர்ந்த அலி(35) என்பவர் எடுத்து திறக்க முயன்றார். அப்போது அந்த பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.இதில் அலியின் இரண்டு கைகளும் துண்டித்த நிலையில், பலத்த ரத்த காயங்களுடன் சாலையில் மயங்கி விழுந்தார். பலத்த வெடிச்சத்தம் கேட்டதும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து ஒருசிலர் உடனடியாக வந்து அலியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அலி பரிதாபமாக உயிரிழந்தார்.