வேலூர்: இந்தியாவில் மகாராஷ்டிரம், குஜராத், ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நெசவுத்தொழில் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக இந்தியாவில். விசைத்தறி மூலம் உற்பத்தியாகும் துணியில் நான்கில் ஒரு பகுதி தமிழகத்தின் கொங்கு மண்டலத்திலும், மற்றவை வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் உருவாகிறது. இந்நிலையில் தங்கள் தொழில் செழிக்க அரசின் சலுகைகள் அதிகளவில் தேவைப்படுவதாக இதில் ஈடுபடுபவர்கள் கூறுகின்றனர். விசைத்தறி நெசவுத்தொழிலை கைதூக்கிவிடுவதற்காக 500 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவித்தாலும், நெசவுத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி மிக குறைவாக உள்ளதாக அவர்கள் தரப்பில் வேதனை குரல்கள் எழுந்து வருகின்றன. வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளடங்கிய 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள், அதை சார்ந்த பாவு ஓட்டுதல் ஆலை, நூல் சுற்றும் மிஷின்கள் மூலம் லுங்கி, கைத்தறி வேட்டி போன்றவை தயாரிக்கப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை மூலப்பொருட்களின் விலை உயர்வு, மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஆகியவை நெசவுத்தொழிலை பாதித்துள்ளது. விசைத்தறியில் வேஷ்டி ஒன்றுக்கு ₹22 வரையும், சேலை ஒன்றுக்கு ₹40 வரையும் கூலியாக வழங்கப்படுகிறது. நடைமுறை செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் தங்களுக்கு 50 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று கேட்டு வந்த நிலையில் அரசு 10 சதவீத கூலி உயர்வை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சேலை ஒன்றுக்கு ₹43.10ம், வேட்டிக்கு ₹24ம் கூலியாக கிடைக்கும். ஆனால் இதுபோதுமானதாக இல்லை என்பது விசைத்தறி நெசவாளர்களின் வேதனை குரல்.