சென்னை: வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்புக்கு தமிழக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று திருமாவளவன் குற்றம்சாட்டினார். வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வன்னியரசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: வேதாரண்யத்தில் சாதி, மத வெறி அமைப்புடன் தொடர்புடையவர்கள் அம்பேத்கர் சிலையை உடைத்துள்ளனர். தமிழகத்தில்தான் சிலைகளை அவமதிக்கும் நிலை நீடித்து வருகிறது. இதற்கு அரசு அதிகாரிகளின் மெத்தனமும், அரசின் அலட்சியப் போக்கும் தான் காரணம். இதுபோன்று சிலைகளை தகர்க்கும் செயல்களுக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.