திருப்பத்தூர்: திருப்பத்தூரை சேர்ந்த ஒருவர் நேற்று வேலூரில் இருந்து திருப்பத்தூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அவரிடம் வேலூரில் இருந்து திருப்பத்தூருக்கு ரூ.82 என்ற கட்டணத்தை மெஷின் மூலம் பிரிண்ட் செய்து டிக்கெட்டை வழங்கினார். அப்போது, அந்த டிக்கெட் ரோலின் இருபுறமும் கர்நாடகா அரசு போக்குவரத்து கழகத்தை குறிக்கும் வகையில், கே.ஆர்.எஸ்.டி.சி’ என அச்சிடப்பட்டு இருந்தது. மேலும் கர்நாடக அரசு போக்குவரத்து கழக முத்திரையும் அச்சிடப்பட்டிருந்தது. தமிழக அரசு பஸ்சில் கர்நாடக அரசு போக்குவரத்து கழக பெயர் அச்சிடப்பட்டதை கண்டு பயணி அதிர்ச்சியடைந்தார். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது. மேலும் கர்நாடகாவில் உள்ள தமிழர்களை கன்னடர்கள் அடிமைப்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட கர்நாடகாவில் தமிழ் பாடல் பாடிய இசை குழுவினரை கன்னட அமைப்பினர் சரமாரி தாக்கியது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மத்திய அரசு இந்தி திணிப்பை தற்போது செயல்படுத்தி வருவது போல் தமிழகத்தில் கன்னட மொழியையும் திணித்து வருகிறதா? என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.