சென்னை: அண்ணா பிறந்த நாள் மாநாட்டில் தொண்டர்களுக்கு தயிர், சாம்பார் சாதம் வழங்கப்போவதாக வைகோ கூறியுள்ளார். மேலும் பிரியாணி வழங்க மாட்ேடாம் என்றும் அறிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மதிமுகவின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி அண்ணாவின் பிறந்த நாள் விழாவை மிகவும் சிறப்பாக முழு நாள் மாநாடாக நடத்தப் போகிறோம். அதில் வரும் தொண்டர்கள் அமர்வதற்காக பிரமாண்டமான பந்தல் அமைக்கப்படும், 75,000 பேருக்கு பகலில் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்குவோம். தொண்டர்களை காசு கொடுத்து அழைத்து வரமாட்டோம். பிரியாணி தரமாட்டோம், காலையில் இருந்து மாலை வரை தொண்டர்கள் அசையாமல் இருக்க வேண்டும். இந்த மாநாட்டில் முக்கிய தலைவராக பரூக் அப்துல்லாவை அழைத்துள்ளேன். அவர் வருவதாக ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆகஸ்ட் 4ம் தேதி இரவு என்னிடம் பேசினார். 5ம் தேதி காஷ்மீரை சிதைத்து விட்டனர். இந்த சமயத்தில் பரூக் அப்துல்லாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது. தொலைபேசி இணைப்புகள் தொடங்கிவிட்டதாக மத்திய அரசு பச்சை பொய் கூறுகிறது. அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.