குழந்தையை தத்து எடுக்கணுமா?

வணிகமாகும் தாய்மை!

குழந்தைப் பிறப்பு என்பது ஒவ்வொரு தம்பதிக்கும் பெருங்கனவு. திருமணம் ஆன அடுத்த மாதம் முதலே உறவுகள், நண்பர்கள் என்ன விசேஷமா என்று கேட்கத் தொடங்கிவிடுகிறார்கள். இந்தக் கேள்விக்குப் பலரும் ஆனந்தமான பதிலைச் சொன்னாலும் எல்லோருக்கும் இந்தக் கேள்வி இனிமையாய் இருப்பதில்லை. குழந்தையின்மை என்பது பெரும் ஏக்கமாக உள்ள எத்தனையோ கோடி தம்பதிகள் இங்குள்ளார்கள். இவர்களின் ஏக்கத்தைத்தான் இங்கு உள்ள பல செயற்கை கருவூட்டல் மருத்துவமனைகள் தங்களுக்கான அறுவடையாகப் பயன்படுத்துகின்றன. மறுபுறம் சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் குழந்தைகள் கடத்தலும் நடந்துகொண்டிருக்கின்றன. சட்டரீதியாக குழந்தையைத் தத்தெடுக்க வழிகள் இருக்கும்போது இதுபோன்ற தேவையற்ற அபாயங்கள் எதற்கு? வாருங்கள் குழந்தை தத்தெடுப்புக்கான நடைமுறைகள் பற்றிப் பார்ப்போம்.

அதிகரிக்குது குழந்தையின்மை!

ஐ.நாவின் அறிக்கை ஒன்று இந்தியாவின் மக்கள் தொகை பற்றிக் குறிப்பிடும்போது இங்குள்ள மக்கள் தொகையில் சுமார் பதினைந்து சதவீதம் பேர் வரை குழந்தைப் பேறு இல்லாமல் தவிப்பதாகச் சொல்லியுள்ளது. அதாவது, ஆறு இந்தியரில் ஒருவருக்கு இயற்கையான குழந்தைப் பேறு இல்லையாம். கடந்த 1975-80 ஆண்டுகளில் ஒரு பெண்ணுக்கு சராசரியாகப் பிறக்கச் சாத்தியமான குழந்தைப் பிறப்பு ஐந்து என்பதிலிருந்து 2015-20ம் ஆண்டுகளில் 2.5 என்று குறைந்துள்ளது. அதாவது, குழந்தைப் பிறப்பதற்கான வாய்ப்பு ஐம்பது சதவீதம் சரிவடைந்திருக்கிறது. இப்படியே சென்றால் 2025-30ம் வருடத்தில் 2.1 என்ற விகிதத்துக்கு சரிவடைந்து 2045-50ம் ஆண்டுகளில் 1.86 என்றும் 2095-2100ல் 1.78 என்றும் வீழ்ச்சியடையும் என்று கவலை தெரிவிக்கிறது அந்த அறிக்கை. இதனால் எதிர்காலத்தில் இந்தியாவின் மக்கள் தொகை விகிதம் குறையும் என்று மகிழ்ச்சியடைந்தாலும் இங்கு குழந்தை இல்லாதவர்களின் விகிதம் மிகவும் அதிகமாகிவிடும் என்ற கவலையும் வருகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில்தான் இந்த குழந்தைப் பேறின்மை

பிரச்சனை அதிகம் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சட்டப்படி தத்து எடுப்பது எப்படி?

மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொண்டும் குழந்தை பாக்கியம் இல்லாத சூழ்நிலைகளில் உள்ள தம்பதியர், சட்டப்படியாக குழந்தையைத் தத்து எடுக்கும் முடிவுக்கு வருகின்றனர். இது நல்ல விஷயம்தான். ஆனால், இடைத்தரகர்களை நாடாமல் சட்டத்துக்குப் புறம்பான வழிமுறைகளில் செல்லாமல் நாமே குழந்தையைத் தத்தெடுக்க முடியும். இந்த தத்து எடுத்தலை இரண்டு வழிமுறைகளில்மேற்கொள்ளலாம்.

வழிகாட்டும் சட்டங்கள்!

1. Guidelines Governing Adoption of Children 2015

2. Juvenile Justice (Care and Protection of Children) Act, 2000

3. Hague Convention on the Protection of Children and Co-operation in Respect of Inter-country Adoption Act, 1993.

தத்து கொடுப்பது எப்படி?

தத்து எடுக்க விரும்பும் பெற்றோர்கள், தத்து கொடுக்க விரும்பும் பெற்றோரிடம் இருந்து தத்தெடுப்பது. இந்தமுறை மிகவும் எளிதானது. இந்தியாவைப் பொருத்தவரை இம்முறைப்படி இந்து, பவுத்தம், சீக்கியம், ஜெயின் மதங்களைச் சேர்ந்தவர்கள் ‘இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரித்தல் சட்டம்-1956’ (Hindu adoptions and maintenance act, 1956) மூலமாகவும், முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சார்ந்தவர்கள் ‘கார்டியன்ஸ் அண்டு வார்ட்ஸ் ஆக்ட்-1890’ (Guardians and Wards Act, 1890) மூலமாகவும் குழந்தைகளைத் தத்தெடுக்கலாம். தத்து எடுக்கும் மற்றும் கொடுக்கும் பெற்றோர்கள், இதன்மூலம் தத்தெடுப்பதற்கான பத்திரம் (Adoption Deed) ஒன்றினை பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், பதிவு செய்வதற்குமுன் இதன் சம்பிரதாயங்களை முடிப்பது அவசியம். சம்பிரதாய முறைப்படி எவ்வாறு திருமணங்கள் செய்யப்பட்டு பதிவு செய்யப்படுகிறதோ, அதேபோல தத்தெடுப்பதும் பதிவு செய்யப்படுகிறது. Adoption Deed பதிவு செய்யப்படுவதே தத்து எடுப்பதற்கான சாட்சி ஆகும்.பொதுவாக, பரஸ்பரம் தத்தெடுக்கவும் கொடுக்கவும் விரும்பும் பெற்றோர் இருந்தாலே இந்த நடைமுறை சாத்தியம். வறுமை, அதிக குழந்தைகள் உள்ளிட்ட பல காரணங்களுக்காக முற்காலங்களில் இப்படியான தத்துக்கொடுத்தல்கள் இருந்தன. தற்போது இந்த முறையில் பெரும்பாலும் யாரும் தத்துக்கொடுப்பதில்லை.

தத்து எடுக்க தகுதிகள்!

*    தத்து எடுக்க விரும்பும் பெற்றோர்கள் நல்ல மனநிலையுடனும், உடல்நிலையிடனும், பொருளாதார நிலையிடனும் இருக்க வேண்டும்.

*    திருமணம் ஆனவர்களும், திருமணம்ஆகாதவர்களும் தத்தெடுக்க முடியும்.

*    தனி பெண்மணி குழந்தையை  தத்தெடுக்க முடியும்.

*    தனி ஆண்மகன், பெண் குழந்தையைதத்தெடுக்க முடியாது.

*    திருமணமான தம்பதியர் குறைந்தது இரண்டு ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகே தத்தெடுக்க முடியும்.

தத்து பெறுவதற்கு சட்டப் பாதுகாப்பு!

இந்த வழிமுறை சற்று நடைமுறை தாமதங்கள் நிறைந்தது. ஆனாலும் சட்டரீதியாக பாதுகாப்பானது. எனவே, உத்திரவாதமானது. உறவினர்கள், நண்பர்கள் மூலமாக தத்துக்கிடைக்க வாய்ப்பு இல்லாத தம்பதிகள் அரசிடம் பதிவு செய்து இந்த முறை மூலம் தத்து பெறலாம்.இந்த முறையில் தத்து எடுக்கப்படும் குழந்தைகளை சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு உட்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காகவும், குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வுக்காகவும் இந்த சட்ட வழிமுறைகள் சற்றே கவனத்துடன் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

தத்தெடுக்க வயது வரம்பு!

* 4 வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியரின் கூட்டு வயது 90க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதுவே தனி பெற்றோராக இருக்கும்பட்சத்தில் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

* 4 முதல் 6 வயது வரையிலான குழந்தையைதத்தெடுக்க விரும்பும் கணவன், மனைவி ஆகிய இருவரின் கூட்டு வயது 100க்கு மிகாமல் இருக்க வேண்டும். தனிபெற்றோராக இருந்தால் 50 வயது வரை இருக்கலாம்.

*  8 முதல் 18 வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியரின் கூட்டு வயது வரம்பு 110க்கு மிகாமல் இருக்க வேண்டும். தனி பெற்றோராக இருந்தால் 55 வயது வரை இருக்கலாம்.

* குழந்தை மற்றும் தத்து எடுக்க விரும்பும் பெற்றோரில் யாரேனும் ஒருவரது வயது இடைவெளி 25 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

*4 குழந்தைகளுக்கு மேல் ஒருவர் / தம்பதியினர்தத்தெடுக்க முடியாது.

தத்தெடுக்கும் நடைமுறை!

தத்தெடுக்க  விரும்புபவர்கள் www.cara.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பத்தைப் பூர்த்தி  செய்து, பின்வரும் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவேண்டும். பிறப்புச்  சான்றிதழ், உடற்தகுதி சான்று, திருமண பத்திரிகை / திருமண பதிவுச்சான்று,  பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, தம்பதியர் புகைப்படம்,  வருமானச்சான்று, நற்சான்றிதழ் (காவல் துறையிடமிருந்து பெறப்படவேண்டும்)அதன்பின்,  சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பின்வரும் சான்றிதழ்களை ஒப்படைக்கவேண்டும்.  ஆளரி சான்று (உறவினர்களிடம் பெறப்படும் சான்று), சொத்து மற்றும் சேமிப்புப்  பத்திரம், பணிபுரிவதற்கான சான்று, ஆண்டு வருமானச்சான்று, ரேஷன் அட்டை.

இதைத்  தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சிறப்புத் தத்தெடுப்பு நிறுவனம், மனிதரின்  குடும்ப விவர அறிக்கையை சமூகப் பணியாளர்களின் மூலம் தயார் செய்யும்.  அதன்பின், அந்தக் குடும்ப உறுப்பினர்களிடமும், பெற்றோர்களிடமும்  தனித்தனியாக ரகசியமாக விசாரிக்கப்படும். அத்துடன், தத்தெடுக்கும் குழந்தையை  வளர்க்கும் மனநிலை குறித்து அவர்களுக்கு கவுன்சலிங் வழங்கப்படும்.  குழந்தையின் விவரங்கள் நிறுவனத்தினரால், விண்ணப்பதாரருக்கு (பெற்றோருக்கு)  அனுப்பப்படும். தத்தெடுக்கவிருக்கும் பெற்றோர்கள் குழந்தையைத் தேர்வு  செய்தபின், சட்ட விதிமுறைப்படி நடவடிக்கையினை சிறப்புத் தத்தெடுக்கும்  நிறுவனம் மேற்கொள்ளும். இறுதியாக நீதிமன்ற ஆணை பெற்று குழந்தையைத்  தத்தெடுத்த பெற்றோரிடம் ஒப்படைக்கப் படும்.

வெளிநாட்டவரும்

தத்தெடுக்கலாம்!

1. தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.

2. ‘காரா’ (CARA- Central Adoption Resource Authority) வலைதளத்தில் (cara.nic.in) அதற்கான விண்ணப்பம் கிடைக்கும். இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம்.

3. விண்ணப்பம் பதிவு செய்த நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்க வேண்டும்.

 

4. அரசாங்கத்தால் இதற்கான அனுமதி வழங்கப்பட்ட அனாதை இல்லம், ஆதரவற்ற அமைப்புகள், தன்னார்வ விடுதிகள் (என்ஜிஓ) மூலம் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளின் புகைப்படங்கள் வலைதளத்தில் காண்பிக்கப்படும்.

 

5. தாங்கள் விரும்பும் குழந்தையை தேர்வு செய்ய முடியும்.

 

6. இதற்காக அமைக்கப்பட்ட குழு, தத்தெடுக்கப்பட்ட பெற்றோரின் மருத்துவ, உடல்நிலை, மனநிலை, பொருளாதார நிலை, வாழ்க்கைச்சூழல் ஆகிய அம்சங்களை ஆராய்ந்து அறிக்கையை அளிக்கும்.

 

7. தகுதியான பெற்றோர் குழந்தையை தத்து எடுத்தவுடன் அரசு சாரா இயக்கம் அல்லது இல்லம் குழந்தையை தத்து கொடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டும். இவ்வாறு குழந்தையைத் தத்தெடுக்கலாம்.

இதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை ஆகலாம். தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வாழ்க்கைமுறை அவர்களின் 18 வயது வரை கண்காணிக்கப்படும். இடையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், குழந்தையை திரும்பப்பெற்றுக்கொள்ளும் அதிகாரம் அரசுக்கு உண்டு.

செலவு எவ்வளவு?

முதலில் தத்தெடுப்பதற்கான படிவத்தை பதிவு செய்ய 1,000 (ஆயிரம் ரூபாய்கள்) செலுத்த வேண்டும். அலுவலர்கள் வீட்டுக்கு ஆய்வுக்கு வரும்போது இல்ல ஆய்வுக்கு என 5,000 (ஐந்தாயிரம் ரூபாய்கள்) செலுத்த வேண்டும். இதைத் தவிர குழந்தை பராமரிப்புச் செலவு என்று ரூபாய் 40,000 (நாற்பதாயிரம்) செலுத்த வேண்டும்.

-இளங்கோ கிருஷ்ணன்

Related Stories: