நெல்லை: நெல்லையில் தொடர் சூறைக்காற்று வீசியதால் கலெக்டர் அலுவலகத்தில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதில் பைக்குகள் சேதமடைந்தன. நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்கிறது. இதனால் மற்ற பகுதிகளில் தென்மேற்கு பருவ காற்று பலமாக வீசிவருகிறது. ஆடி மாதம் தொடங்கிய பின்னர் புழுதியை பரப்பும் காற்று வீசுகிறது. நேற்று பகலில் தொடங்கி நாள் முழுவதும் சூறைக்காற்று போல் காற்றின் வேகம் இருந்தது. இதனால் வாகனஓட்டிகள் மற்றும் சாலைகளில் நடந்து செல்பவர்கள் சிரமப்பட்டனர். நேற்று மாலை வீசிய பலத்த காற்றின் போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகம் முன் இருந்த வேப்பமரம் ஒன்றின் பெரிய கிளை ஒடிந்து விழுந்தது.