மேலூர்: மேலூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் தண்ணீர் தேடி அலையும் மக்கள் ஒருபக்கம் என்றால் குழாய்கள் உடைந்து தினசரி பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகும் அவலமும் நடக்கிறது. கடும் குடிநீர் பஞ்சத்தில் ஆண்டுதோறும் தவித்த சில மாவட்ட மக்களுக்கு வரபிரசாதமாக அமைந்தது காவிரி கூட்டு குடிநீர் திட்டம். இதற்காக திருச்சி மாவட்டம் கரூரில் இருந்து ராட்சத குழாய்கள் 200 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டு தினசரி தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இவற்றை கண்காணிக்க ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு அலுவலகம் அமைக்கப்பட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினசரி பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் சேதம் ஏற்பட்டு, தண்ணீர் கசிகிறதா, குடிநீர் வால்வுகளில் சேதம் உள்ளதா, குழாய்களை உடைத்து தண்ணீர் திருடப்படுகிறதா, மொத்தத்தில் தண்ணீர் வீணாகாமல் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.