டிக்-டாக்கில் வீடியோ பதிவிட சாகசம் செய்த வாலிபருக்கு முதுகெலும்பு முறிவு

துமகூரு: கர்நாடகா மாநிலத்தில் டிக்-டாக் செயலியில் வீடியோ பதிவிட சாகசம் செய்த வாலிபர் ஒருவருக்கு முதுகெலும்பு முறிந்தது. டிக்டாக் செயலியில்  பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நடிப்பு, நடனம், சாகசம், என அனைத்தையும் வீடியோவாக பதிவிட்டு, தங்களது திறமையை காண்பித்து வருகின்றனர். லைக்குகள், ஷேர்கள் அதிகம் பெற வேண்டும் என்பதற்காகவும், பயனர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் சிலர் விபரீத செயல்களில் ஈடுபட்டு உயிரையும் மாய்த்துக் கொள்வதுண்டு.

அந்த வகையில், கர்நாடகாவின் கோடேகெரே கிராமத்தை சேர்ந்தவர் குமார் சாகசம் செய்து வீடியோ பதிவிட விரும்பினார்.  தனது நண்பர்களின் உதவியுடன் ஒரு சாகச வீடியோவை எடுத்தார். அப்போது தரையில் கை படாமல், நண்பரின் கையின் மீது தனது ஒரு காலை வைத்து பல்டி அடிக்க முயன்றார். எதிர்பாராத விதமாக தலை கீழாக தரையில் விழுந்தார்.  அதில் அவரின் முதுகெலும்பு உடைந்தது. தரையில் படுத்துக்கொண்டு கதறிய குமாரை அவருடைய நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குமார் தலைகீழாக விழும் சாகச வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: