சாயல்குடி: பரமக்குடி - சாயல்குடி மாநில நெடுஞ்சாலை மராமத்து பணிகள் தரமற்று இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். சாயல்குடி - தஞ்சாவூர் மாநில நெடுஞ்சாலை செல்லும் பரமக்குடி - முதுகுளத்தூர், முதுகுளத்தூர் - கடலாடி சாலைக்கு கடந்த 2017ம் ஆண்டு புதிதாக சாலை அமைக்கும் பணி நிறைவடைந்தது. சாலை ஆய்வுக்காக 10க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு மேல் சாலை போடாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தனர். இந்நிலையில் சேதமடைந்த அந்த சாலையை சீரமைத்து, புதிய சாலை அமைக்கும் பணி சில நாட்களாக நடந்து வருகிறது. கடலாடி அருகே வேப்பங்குளம், மேலச்சாக்குளம், முதுகுளத்தூர் அருகே மகிண்டிவிலக்கு, பாம்பூர் உள்ளிட்ட இடங்களில் புதிய சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பகல் நேரங்களில் போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் அவசரகதியில் சாலை அமைப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. சாலை அமைக்கும் பணி நடக்கும் போதே வாகனங்கள் ஏறி செல்வதால் சாலை சேதமடைந்து வருகிறது. இதில் அளவு உயர்த்தப்பட்ட சாலையின் இருபுறமும் கிராவல் மண் போடாததால் இரு வாகனங்கள் விலகும் போது விபத்து ஏற்பட்டு வருகிறது. இருசக்கர வாகனங்கள், சிறியரக கார்கள் பக்கவாட்டிலிருந்து இச்சாலையில் ஏறமுடியாத நிலை உள்ளது.