புவனேஸ்வர்; தங்கள் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு போராடி வரும் பீகார், ஆந்திராவுடன் இணைந்து போராட ஒடிசாவின் பிஜு ஜனதா தளமும் முடிவு செய்துள்ளது.பீகார், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள், தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்படி வலியுறுத்தி வருகின்றன. ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளமும், பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளமும், ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரசும் இந்த கோரிக்கையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளன.சமீபத்தில், ஒடிசாவில் பானி புயல் கடுமையாக தாக்கியது. இதைத் தொடர்ந்து, மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு இயற்கை பேரிடர் பாதிப்புகளையும் தகுதியாக கொள்ள வேண்டும் என பிரதமர் மோடியை சமீபத்தில் சந்தித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தினார். இந்நிலையில், பிஜு ஜனதா தளத்துக்கு மக்களவையில் 12 எம்பி.க்களும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 16ம், ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு 22 எம்பி.க்களும் உள்ளனர். இதில் ஐக்கிய ஜனதா தளம் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.