நாசிக்: மகாராஷ்டிராவில் தனியார் நிதி நிறுவனத்தில் பட்டப்பகலில் புகுந்த முகமூடி ஆசாமிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த தாக்குதலில் ஆடிட்டர் கொல்லப்பட்டார். 2 ஊழியர்கள் காயமடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில் உந்த்வாடி என்ற இடத்தில் உள்ள சிட்டி சென்டரில் வணிக வளாகத்தில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இங்கு தங்க நகைகள் அடமானம் வைத்து பணம் கொடுக்கப்படுகிறது. நேற்றுக் காலை அலுவலக ஊழியர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். சில வாடிக்கையாளர்களும் அலுவலகத்தில் இருந்தனர். காலை 10.45 மணியளவில் முகமூடி அணிந்த 4 பேர் அலுவலகத்துக்குள் அதிரடியாக புகுந்தனர். அவர்களை பார்த்ததும் அலுவலகத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சுதாரிப்பதற்குள் முகமூடி கும்பலில் ஒருவன், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில், மூன்று தோட்டாக்கள் அலுவலக ஆடிட்டர் சஞ்சு சாமுவேல் மீது பாய்ந்தது. இதில் அவர் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.