சேலம்: தர்மபுரியில் நடந்த 50 லட்சம் கொள்ளை வழக்கில் சேலம் சிறை வார்டனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து, அவரை சிறை நுழைவாயிலில் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். சேலம் மத்திய சிறையில் 200க்கும் மேற்பட்ட வார்டன்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 6 மணி ஷிப்டிற்கு வார்டன்கள் சிறைக்குள் சென்று கொண்டிருந்தனர். அப்போது நுழைவாயில் அருகே, தர்மபுரியை சேர்ந்த வார்டன் ஒருவர் உள்ளே சென்றபோது திடீரென வந்த 5பேர் அவரை பாய்ந்து பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த 5 பேரின் பிடியில் இருந்து சிறை வார்டன் திமிறினார். ஆனால், சிறிது நேரத்தில் அவரை வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்று விட்டனர். 5 நிமிட நேரத்திற்குள் இந்த சம்பவம் நடந்ததால் என்ன நடக்கிறது என்பது குறித்து மற்ற வார்டன்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. சிறை முன்பே வார்டனை கடத்திச் சென்று விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்பு அவர் கடத்தப்படவில்லை, அவரை கொண்டு சென்றது தர்மபுரியை சேர்ந்த தனிப்படை போலீசார் என்பது தெரியவந்தது.