நாகை: பாட புத்தகங்களில் மத்திய அரசு மதத்தை திணிப்பதை கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார். நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: மத்தியில் ஆட்சி செய்யும் பாஜ புதிய கல்வி கொள்கையை புகுத்த நினைக்கிறது. கஸ்தூரிரங்கன் அறிக்கை இந்தி, ஆங்கில மொழியில் உள்ளது. ஏற்கனவே மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று போராடி வருகின்றோம். பிளஸ் 2 பாடதிட்டத்திற்கும், நீட் நுழைவு தேர்விற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நீட் நுழைவு தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பிளஸ் 2 பாடதிட்டத்தில் இடம் பெறுவது இல்லை. கல்வியில் சொந்த கொள்கையை திணிக்க நினைப்பது ஜனநாயக கடமை இல்லை. கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வழங்க வேண்டும்.