சேலம்: நிலவில் நீர் இருப்பதை சந்திரயான்-2 உறுதி செய்யும் என்று முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். இந்தியா கடந்த 2008ம் ஆண்டு நிலாவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது. அப்போது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்து படம் எடுத்து அனுப்பியது. இதனால் ரூ.800 கோடி செலவில் அனுப்பப்பட்ட சந்திராயன்-1 திட்டம் வெற்றி பெற்றது. இதையடுத்து நிலாவை மேலும் ஆராய்ச்சி செய்ய சந்திராயன்-2 விண்கலம் திட்டத்துக்கு இஸ்ரோ முடிவு செய்தது. பல நூறு கோடி ரூபாய் செலவில் சந்திராயன்-2 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வுத்துறையின் மிக முக்கியமான திட்டமான சந்திரயான்-2 செயற்கைக்கோள் வரும் ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.