பெங்களூரு: ‘‘மேகதாது அணை பணியை தொடங்க வேண்டும்,’’ என்று கர்நாடகா துணை முதல்வர் பரமேஸ்வர் உத்தரவிட்டார்.பெங்களூரு விதானசவுதாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் நீர்ப்பாசனம் மற்றும் பொதுப்பணி துறை பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் பரமேஸ்வர், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், பரமேஸ்வர் பேசியதாவது: கர்நாடகாவில் செயல்படுத்தி வரும் நீர்ப்பாசன திட்டங்களை முடிப்பதற்காக பட்ஜெட்டில் 34 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி எவ்வளவு விரைவில் பணி முடிக்க வேண்டுமே, அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும். பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவைக்காக காவிரி நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் நான்கு கட்ட பணிகள் முடிக்கப்பட்டு, ஐந்தாம் கட்ட பணி தொடங்கியுள்ளோம். இத்திட்டம் செயல்படுத்துவதின் மூலம் ஓரளவுக்கு குடிநீர் பிரச்னையை தீர்க்க முடியும். ஆனால், மாநகரின் வளர்ச்சியை தொலைநோக்கு பார்வையுடன் பார்க்கும்போது, தற்போது செயல்படுத்தி வரும் குடிநீர் திட்டங்கள் போதுமானதாக இல்லை. இதை கருத்தில் கொண்டு காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச அளவில் டெண்டர் விட்டு திட்ட வரைவு தயாரித்து மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.