சென்னை: தனது மகள் திருமண ஏற்பாட்டுக்காக பரோல் கேட்டு நேரில் ஆஜராகி வாதிடுவதற்காக நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்னை உள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் வசிக்கும் தன் மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.