புதுடெல்லி: மகள் சித்ரவதை காரணமாக, முதியோர் இல்லத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட பாட்டியை, அவரின் சகோதரியுடன் செல்ல டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த 76 வயது பாட்டி ஒருவர் தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். அவரது மகள் சரியாக சாப்பாடும் கொடுக்காமல், வெளியில் செல்லவும் அனுமதிக்காமல் சித்ரவதை செய்து வந்துள்ளார். பெற்ற தாயை, சொந்த மகளே சித்ரவதை செய்வதை பார்த்த, ஒருவர் இதுகுறித்து போலீசில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். இதனால் போலீசார், அந்த மூதாட்டியை மீட்டு, ‘ஹெல்ப்பிங் பிரெய்ன்ஸ்’ என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வந்த ‘நய் துனியா’ என்ற முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். ஆனால் அங்கு தங்கியிருக்க அந்த பாட்டிக்கு விருப்பம் இல்லை. இவரை பார்க்க, டாக்டராக இருக்கும் அவரது மூத்த சகோதரி முதியோர் இல்லத்துக்கு வந்தார். தனது தங்கை பரிதாபமான நிலையில் தங்கியிருப்பதை பார்த்து மனவேதனை அடைந்தார். இதனால் முதியோர் இல்ல மானேஜரை அணுகி, தனது தங்கையை, தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார். இதற்கு மானேஜர் மறுத்துவிட்டார். இதனால் இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. நீதிமன்றத்தை அணுகும்படி போலீசார் தெரிவித்துவிட்டனர்.