திருவாரூர்: டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ஆழ்துளை கிணறுகள் வைத்திருப்பவர்கள் குருவை சாகுபடியில் ஈடுபடலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் குடிநீர் மற்றும் மின்சாரம் குறித்த திட்டப்பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், மேட்டூர் ஆணை நீர்மட்டம் மிகக் குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடிக்காக தண்ணீர் தற்போது திறக்கப்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். அதேபோல், குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் வந்தால், மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தார். முன்னதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வாய்ப்பில்லை என்று அறிவித்திருந்தார்.