ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரம்ஜான் தினத்தன்று புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் ரமலான் பண்டிகை இஸ்லாமிய மக்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தலைவர்களும் இஸ்லாமிய மக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர். ரமலான் பண்டிகையையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களிலும் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினார்கள்.
பின்னர் ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காகாபோரா அருகே நர்பால் கிராமத்தில் பயங்கரவாதிகள் இன்று காலை திடீரென நுழைந்தனர் என ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் படுகாயம் அடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பெண்மணி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின் அங்கிருந்து தீவிரவாதிகள் தப்பிச் சென்றனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.