சென்னை: விதியை மீறியதற்காக தமிழகத்தை சேர்ந்த 2 மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 100 மாணவர்கள் மருத்துவம் பயிலும் பொது 500 நோயாளிகளுக்கான படுக்கை வசதியும், 150க்கும் மேற்பட்டோர் பயிலும் கல்லூரியில் 750 நோயாளிகளுக்கான படுக்கை வசதியும் இருக்க வேண்டும் என்பது மருத்துவ கவுன்சில் வகுத்துள்ள முக்கிய விதிகளாகும். போதிய மருத்துவப் பேராசிரியர்கள், முறையான கட்டமைப்பு, மாணவர்கள் படிப்பதற்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாகும். மேலும் இந்த விதிகளில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும் குறிப்பிட்ட கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படும். இந்நிலையில் மருத்துவ கவுன்சில் நடத்திய ஆய்வில், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத தஞ்சாவூர் பொன்னையா ராமஜெயம் மருத்துவக்கல்லூரி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்னை மருத்துவக் கல்லூரி, மற்றும் மருத்துவமனை ஆகியவற்றில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.